செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

டெலிபோன் ஒட்டு கேட்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 5-ந்தேதி விசாரணை

Published On 2021-08-01 08:02 GMT   |   Update On 2021-08-01 08:02 GMT
மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் உள்ளிட்டவர்களின் போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து என்.ராம், சசிகுமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் ‘பெகாசஸ்’ உளவு சாப்ட்வேர் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கிளப்பி போராட்டம், பாராளுமன்றத்தில் அமளி போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் உள்ளிட்டவர்களின் போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து என்.ராம், சசிகுமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

டெலிபோன் ஒட்டு கேட்பு தொடர்பாக முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.


இதை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டது. எனவே விசாரணை பட்டியலில் வழக்கு இடம் பெற செய்யப்பட்டது.

இந்த வழக்கு வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு விசாரணை நடைபெறும்.

அப்போது சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல மேல்சபை எம்.பி. ஜான்பிரிட்டா, வக்கீல் எம்.எல்.சர்மா ஆகியோர் தனி மனு தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபலும் மனுதாக்கல் செய்துள்ளார். இவையும் விசாரணைக்கு வர இருக்கிறது.

5-ந் தேதி விசாரணை நடக்கும் போது சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News