செய்திகள்
கட்டணம் செலுத்த பணம் தராததால் விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை
தஞ்சாவூர் அருகே கட்டணம் செலுத்த பணம் தராததால் விஷம் தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளியக்கிரஹாரம் வெண்ணாற்றங்கரை நீரேற்றும் நிலையம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 45). இவருடைய மகள் அம்முனி(18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அம்முனி கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக, தனது அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு அவருடைய அப்பா தற்போது பணம் இல்லை பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதனால் அம்முனி மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் எலி மருந்து (விஷம்) தின்றுள்ளார்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தஞ்சை நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.