செய்திகள்
புளியங்குடி அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 50). இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதில் மூத்த பெண்ணான மகேஸ்வரி (23) என்பவர் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. சீதாலட்சுமி தனது மகளை அருகில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார் ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.