செய்திகள்
மானசா-ராகில்

இளம்பெண்ணை சுட்டுக்கொல்ல பீகாரில் இருந்து துப்பாக்கி வாங்கிய வாலிபர்

Published On 2021-08-01 09:15 GMT   |   Update On 2021-08-01 09:15 GMT
கேரளாவில் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு வாலிபரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், கோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் மானசா.

இவர் கொச்சி அருகே நெல்லிக்குழி பகுதியில் டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் மானசாவை அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்ற  வாலிபர் ஒருவர்  துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலையான மானசாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. கேரளாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக கொத்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. பல் டாக்டர் மானசாவை சுட்டவர் ராகில் என்ற வாலிபர். இவர் மானசாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ராகிலின் காதலை  ஏற்க மானசா மறுத்ததால் அவரை ராகில் சுட்டுக்கொன்றதாக  தெரிகிறது.

இதற்கிடையே ராகில்  பயன்படுத்திய துப்பாக்கி எங்கிருந்து வாங்கியது? யார் மூலம் வாங்கப்பட்டது? என்பது குறித்து போலீசார்  விசாரணை நடத்தினர். இதில் ராகில் வைத்திருந்த  துப்பாக்கி பீகார்   மாநிலத்தில் இருந்து வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த துப்பாக்கியை பயன்படுத்தி தான் மானசாவை அவர்  சுட்டு கொன்றுள்ளார்.

சமீப காலமாக கேரளாவிற்கு பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து துப்பாக்கி கடத்தி  வருவது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே மத்திய அரசும் மாநில அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.

டாக்டர் மானசா கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி பீகாரில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்ததால் இச்சம்வத்திற்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

மேலும் துப்பாக்கியை ஆன்லைன் மூலமாக வாங்கினாரா? அல்லது பீகாரில் உள்ள வேறு யார் மூலமாவது வாங்கினாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News