செய்திகள்
கைது

போலி ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் பெற்றவர் கைது

Published On 2021-11-23 10:38 GMT   |   Update On 2021-11-23 10:38 GMT
ராமநாதபுரம் அருகே பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி போலி ஆவணம் கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம் என்பவரின் மகன் முருகன் (வயது25). இவர் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து இருந்தாராம். இவரது விண்ணப்பங்களை பரிசீலித்தபோது அவரது பெயரில் சான்றிதழ்கள் மற்றும் முகவரி ஆவணங்களை பயன்படுத்தி ஏற்கனவே பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாண்டி மகன் விவசாயி முருகன் (வயது47) என்பவர் தனது பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மேற்கண்ட முருகனின் பெற்றோரிடம் சென்று பொய்யான காரணங்களை கூறி ஏமாற்றி அவர்களின் மகன் முருகனின் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளார்.

அதனை பயன்படுத்தி தனது புகைப்படத்தை ஒட்டி பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் இதுகுறித்து புகார் செய்தார்.

அவரது உத்தரவின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டி மகன் முருகன் என்பவரை கைது செய்தனர். இவர் இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு சென்று திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News