செய்திகள்
விபத்தில் சிக்கிய பஸ்சின் முன்பகுதி நொருங்கி உள்ளதை படத்தில் காணலாம்.

பெருந்துறை அருகே விபத்து- கண்டக்டர் உள்பட 2 பேர் பலி

Published On 2019-09-25 04:20 GMT   |   Update On 2019-09-25 04:20 GMT
பெருந்துறை அருகே நள்ளிரவில் முன்னாள் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெருந்துறை:

கோவையிலிருந்து ஓசூருக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சின்னுராஜ் (வயது 50) என்பவர் ஓட்டிச்சென்றார்.

அவரது அருகே ஓமலூரை சேர்ந்த கண்டக்டர் உதயகுமார் (வயது 26) அமர்ந்திருந்தார். பஸ்சில் 35 பயணிகள் பயணம் செய்தனர்.

நள்ளிரவு 12.15 மணியளவில் பஸ் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் பிரிவில் வந்தபோது எதிரே ஒரு போர்வெல் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி குன்னத்தூருக்கு செல்வதாக டிரைவர் லாரியை மெதுவாக ஓட்டி அருகே உள்ள மண்பாதையில் திருப்ப எண்ணினார்.

இதற்காக டிரைவர் லாரியை மெதுவாக ஓட்டிய போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் டிரைவரின் இடபுறம் அமர்ந்திருந்த கண்டக்டர் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும் அவரது பக்கத்து வீட்டில் இருந்த பெங்களூரை சேர்ந்த மகேஸ்வரி. இவரது மகள் பிரேமா (வயது 16) மற்றும் டிரைவர் சின்ராஜ் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் பிரேமா பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்தால் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

மேலும் இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News