ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசுவாமி

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது

Published On 2019-12-28 04:02 GMT   |   Update On 2019-12-28 04:02 GMT
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் 2 முறை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் திருக்கல்யாணம், பெண்ணையாற்று உற்சவம், மாசிமக உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி முக்கிய விழாவில் ஒன்றான பகல்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தேவநாதசுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசுவாமியும், தேசிகரும் பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு தேவநாதசுவாமி, தேசிகர், ஆழ்வார்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கப்பட்டு சாமிக்கு சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

வருகிற 1-ந் தேதி ஆங்கிலப்புத்தாண்டையொட்டி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. பகல் பத்து உற்சவம் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. வருகிற 6-ந் தேதி முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், பட்டாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News