ஆன்மிகம்
உடுப்பி கிருஷ்ணன்

உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது

Published On 2020-09-12 08:32 GMT   |   Update On 2020-09-12 08:32 GMT
கொரோனா பரவல் காரணமாக உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இந்த விழா பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடந்தது.
உடுப்பி (மாவட்டம்) டவுனில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கிருஷ்ணஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த 22-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் செப்டம்பர் 11-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா தொடங்கியது. இதையொட்டி கோவில் முழுவதும் பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை மகா பூஜை, துளசி அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. அதைதொடர்ந்து கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகளும நடந்தது. இந்த சிறப்பு பூஜைகளை அஷ்டமடங்களின் மடாதிபதிகளான ஈசப்பிரியா ஸ்ரீபாதரு, பலிமாரு மடாதிபதி வித்யாதீர்த்த ஸ்ரீபாதரு உள்பட கிருஷ்ணன் கோவிலுக்கு உட்பட்ட பல்வேறு மடாதிபதிகள் கலந்துகொண்டனர்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவிலின் கனகனபின்டி பகுதியில் உள்ள ஜன்னல் துவாரம் வழியாக கருவறையில் உள்ள கிருஷ்ணனை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

மேலும் கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடந்தது. அத்துடன் உறியடி நிகழ்ச்சியும் நடந்தது. இதில் 50-க்கும் குறைவானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று இரவு பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வினியோகம் செய்யும் விட்டலா பின்டி என்ற நிகழ்ச்சி சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்தது. விழாவையொட்டி கோவிலின் 4 ரத வீதிகளிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
Tags:    

Similar News