ஆன்மிகம்
சுவாமி-அம்பாள் வெள்ளி காமதேனு, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்தபடம்.

நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் வெள்ளி வாகனத்தில் வீதி உலா

Published On 2019-07-10 06:27 GMT   |   Update On 2019-07-10 06:27 GMT
நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் வெள்ளி காமதேனு, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்த பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
பிரசித்தி பெற்ற பழமையான சிவ ஆலயங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆனி மாதம் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்தேரோட்ட திருவிழா கடந்த 6-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடந்து வருகிறது.

3-ம் திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. இரவு 7 மணிக்கு கூட்டு வழிபாடும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. 8 மணிக்கு முத்துசந்திரனின் தோல்பாவை கூத்தும் நடந்தது.

இன்று (புதன்கிழமை) காலையில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், இரவில் சுவாமி, அம்பாள் இந்திர விமானம் வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4-30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளுகின்றனர். காலை 8.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. மறுநாள் தீர்த்தவாரி நடக்கிறது.
Tags:    

Similar News