உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் பிளஸ் -2 தேர்வை 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்
சேலம் மாவட்டத்தில் இன்று பிளஸ் -2 தேர்வை 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
சேலம்:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
39 ஆயிரத்து 255 பேர் சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 18 ஆயிரத்து 394 மாணவர்கள், 20 ஆயிரத்து 861 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 255 பேர் தேர்வை எழுதினர். மாவட்டம் முழுவதும் 154 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
பிளஸ்-2 தேர்வையொட்டி 154 தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 200-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதுதவிர 227 தனித்தேர்வர்களுக்காக 5 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறுவதையொட்டி மின் விளக்கு, குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் ஆகியவை செய்யப்பட்டிருந்தது. வகுப்பறையில் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் பதிவு எண், வரிசை எண் ஆகியவற்றை மேஜையில் எழுதப்பட்டிருந்தது மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் முன் அவர்கள் தங்களுடைய தேர்வு எழுதும் வகுப்பறையை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் கரும்பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
மேலும் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு தொடங்கும் முன் அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு இதற்கிடையே உடையாப்பட்டி அரசு பள்ளியில் நடந்த பிளஸ் 2 தேர்வை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு செய்யப்பட்ட வசதிகள், தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவிகளிடம் ஏதாவது குறைகள் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டார்.