ஆன்மிகம்
ஜெகந்நாத பெருமாள்

ஜெகந்நாத பெருமாள் கோவிலில் சுக்ல பட்ச அ‌‌ஷ்டமி யாகம்

Published On 2020-01-04 03:23 GMT   |   Update On 2020-01-04 03:23 GMT
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் கோவிலில் சுக்ல பட்ச அ‌‌ஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அ‌‌ஷ்டமி யாகம் நடந்தது.
108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40-ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோவில். இந்த கிராமத்தில் கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாத பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்தனர். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது.

நந்திபெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இந்த பெருமாளை திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த மண்ணுலகில் ஒப்பற்ற திவ்ய தேசமாக சிறப்பிக்கப்பட்டு தட்சிண ஜெகந்நாதம் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் மகாலெட்சுமி பிரார்த்தனை செய்து 8 அ‌‌ஷ்டமி விரதம் இருந்து 8-வது அ‌‌ஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வளர்பிறை அ‌‌ஷ்டமியிலும் சிறப்பு சுக்ல பட்ச அ‌‌ஷ்டமி யாகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று வளர்பிறை அ‌‌ஷ்டமியை முன்னிட்டு செண்பகவல்லி தாயாருக்கு காலை சிறப்பு அ‌‌ஷ்டமி யாகம் நடந்தது.

தொடர்ந்து மூலவர் உற்சவருக்கு திருமஞ்சனமும், தாயார் புறப்பாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், தாயாரையும் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News