செய்திகள்
கோப்புபடம்

திட்டக்குடியில் உணவு வழங்கக்கோரி அரசு விடுதி மாணவர்கள் போராட்டம்

Published On 2021-02-19 12:44 GMT   |   Update On 2021-02-19 12:44 GMT
திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் விடுதி மாணவர்கள் உணவு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி:

திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திட்டக்குடியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கி, படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மதியம் விடுதி ஊழியர்கள் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டும் உணவு கொடுத்து விட்டு, மீதமுள்ள உணவை கால்நடைகளுக்கு கொட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் விடுபடாமல் உணவு வழங்கக்கோரி விடுதி முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அனைத்து மாணவர்களுக்கும் சரியான முறையில் உணவு வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, விடுதியில் உள்ள தங்களது அறைகளுக்கு சென்றனர்.

Tags:    

Similar News