செய்திகள்
கொலை

தாண்டிக்குடி அருகே வாலிபரை கொன்று 50 அடி பள்ளத்தில் வீசிய கும்பல்

Published On 2021-10-11 12:20 GMT   |   Update On 2021-10-11 12:20 GMT
தாண்டிக்குடி அருகே வாலிபரை கொன்று கைகளை கட்டி 50 அடி பள்ளத்தில் உடலை வீசிச் சென்ற கும்பல் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு - கொடைக்கானல் மலைச்சாலையில் வாழகிரி ஊத்து பகுதியில் உள்ள பள்ளத்தில் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம் சிதைந்து வாலிபர் இறந்து கிடந்தார்.

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் இறந்து பல நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.இதனையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரிய வில்லை. சுமார் 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும். அவரை யாரேனும் கடத்தி வந்து இங்கு கொலை செய்து விட்டு பின்னர் கைகளை கட்டி வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் இதற்கு முன்பு இதே போன்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. வெளி மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் முன் விரோதம் காரணமாக கொடைக்கானலுக்கு அழைத்து வந்து கொலை செய்து விட்டு உடலை சாலையோரம் உள்ள பள்ளத்தில் வீசி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது.

அதன்படி தற்போது நடந்துள்ள சம்பவமும் முன் விரோதம் காரணமாக வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை கடத்தி வந்து இங்கு கொலை செய்து வீசிச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News