செய்திகள்
பெண்களை கேலி செய்யும் கும்பல் - கலெக்டரிடம் பரபரப்பு புகார்
வேலைக்கு செல்லும் பெண்களையும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளையும் பின்தொடர்ந்து கேலி செய்து வருகின்றனர்.
திருப்பூர்:
வியாபாரிகளை மிரட்டும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.செல்வராஜ் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டு தண்ணீர்பந்தல் காலனி, வீரப்ப செட்டியார் நகர், ஜூபிடர்வீதி, சாஸ்திரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மதுபோதையுடன் நடமாடுவது அதிகரித்துள்ளது.
இந்த நபர்கள் வேலைக்கு செல்லும் பெண்களையும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளையும் பின்தொடர்ந்து கேலி செய்து வருகின்றனர்.
இந்த நபர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வியாபாரிகளை மிரட்டி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.