வழிபாடு
‘ராணி கி வாவ்’ படிக்கிணறு

‘ராணி கி வாவ்’ படிக்கிணறு

Published On 2021-12-26 02:30 GMT   |   Update On 2021-12-25 05:37 GMT
சிற்பத்தில் பூமியை பெண்ணாக உருவகித்து புராணங்கள் சொல்வதைப் போல, சிற்பத்திலும் பூமாதேவியை பெண்வடிவில் செதுக்கியிருப்பது அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.
குஜராத் மாநிலம் பதான் நகரத்தில் அமைந்துள்ளது, ‘ராணி கி வாவ்’ என்ற படிக்கிணறு. இதனை தமிழில் ‘ராணியின் கிணறு’ என்பார்கள். 1050-ம் ஆண்டு சோலங்கி குல அரசை நிறுவியவர் முதலாம் பீமதேவன். இவரது நினைவாக, அவரது மனைவி உதயமதியால் கட்டப்பட்டதுதான் இதன் படிக்கிணறு. இதனை ஒரு பெண் நிறுவிய ‘காதல் சின்னம்’ என்றும் சொல்லலாம். 64 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 27 மீட்டர் ஆழம் கொண்டது இது. தரையின் கீழே 7 அடுக்குகளைக் கொண்டதாக இந்த கட்டமைப்பு இருக்கிறது. பிற்காலத்தில் மண்மூடிப்போயிருந்த இந்த கட்டிடத்தை, தொல்லியல் துறையினர் 1960-ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

இந்த படிக்கிணற்றின் பக்கவாட்டு சுவர்களில் திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய சிற்பங்கள், காளி, மகிஷாசூரன், நாக கன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய தேவலோக கன்னிகள், புத்தர், சாதுக்கள், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட திருமால் போன்ற பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் இங்கே நீங்கள் பார்க்கும் வராகமூர்த்தி சிற்பம்.

பொதுவாக வராகமூர்த்தி பூமியை மீட்டு வந்த சிற்பத்தை வடிக்கும்போது, அவரது இரண்டு கொம்புகளுக்கு மேல் பூமி இருப்பது போல்தான் வடிப்பார்கள். ஆனால் இந்த சிற்பத்தில் பூமியை பெண்ணாக உருவகித்து புராணங்கள் சொல்வதைப் போல, சிற்பத்திலும் பூமாதேவியை பெண்வடிவில் செதுக்கியிருப்பது அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.
Tags:    

Similar News