3 நியமன எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு: அரசு கொறடா தகவல்
புதுச்சேரி:
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அக்கட்சி பெரும்பான்மையை இழந்தது.
ஆளும் கட்சியும், எதிர் கட்சிகளும் சமபலத்தில் உள்ளது. இந்த நிலையில் வருகிற 22- ந்தேதி புதுவை சட்டசபையை கூட்டி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபையில் பாரதீய ஜனதா சார்பில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை இல்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் அரசு கொறடா அனந்தராமன் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை கட்சி சார்பில் குறிப்பிட்டால் அவர்களை தகுதி நீக்க செய்ய வாய்ப்பு உள்ளது.
இதற்கு சட்டத்தில் வழி வகை உள்ளது. 3 நிமயன எம்.எல்.ஏ.க்களையும் பாரதீய ஜனதா என கூற எந்த முகாந்திரமும் இல்லை. 3 பேரும் சட்டரீதியாக கட்சி சார்பில் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் இல்லை.
3 நியமன எம்.எல்.ஏ.க் களையும் கட்சி ரீதியாக எடுத்து கொள்வது சட்டத்திற்கு புறம்பானது. மத்திய அரசால் நியமிக்கப்படும் நியமன எம்.எல்.ஏக்களை பாரதீய ஜனதாவினர் என சொல்வது அரசியல் அமைப்புக்கு எதிரானது.
வாக்களிக்க அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறினாலும் பாரதீய ஜனதாவை சேர்ந்தவர்கள் என கவர்னர் குறிப்பிடுவது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.