செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: கர்நாடகாவில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

Published On 2021-11-28 08:40 GMT   |   Update On 2021-11-28 08:40 GMT
கர்நாடகத்தில் உள்ள அனைத்து பஸ், ரெயில் நிலையங்களிலும் மீண்டும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு:

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தார்வாரில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 281 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு ஆனேக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியிலும் மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் உள்பட 33 பேர், பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் 33 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்பு மாணவ, மாணவிகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து கேரளா, மகாராஷ்டிரா மாநில எல்லை பகுதிகளை தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்துவருகின்றனர்.

கேரளா எல்லையையொட்டி உள்ள தட்சிண கன்னடா, குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய 4 மாவட்டங்களின் எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை அறிக்கையும் (நெகட்டிவ் சான்றிதழ்) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட உள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் தற்போது ஒமிக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் முன்பு இருந்த கொரோனா வைரசை காட்டியிலும் 5 மடங்கு வேகமாக பரவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் உள்ள அனைத்து பஸ், ரெயில் நிலையங்களிலும் மீண்டும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News