செய்திகள்
குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கும் ஜனாதிபதி

போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார் ஜனாதிபதி

Published On 2021-01-30 14:10 GMT   |   Update On 2021-01-30 14:10 GMT
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்தை ஜனாதிபதி ஊற்றினார். இந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலியோ சொட்டு மருந்து முகாமை நாளை தொடங்கி வைக்கிறார். போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இந்த மையங்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முக கவசம் அணிதல் மற்றும் கை கழுவுதல் கட்டாயமாகும். 

போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
Tags:    

Similar News