செய்திகள்
கைது

கே.கே.நகரில் 125 ரூபாய் தகராறில் தொழிலாளி கொலை

Published On 2019-11-29 05:15 GMT   |   Update On 2019-11-29 05:15 GMT
சென்னை கே.கே.நகரில் 125 ரூபாய் தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராபர்ட் (வயது40). இவர் சென்னையில் தங்கி இருந்து கட்டுமான வேலைகளை செய்து வந்தார். தனியாக அறை எடுத்து தங்காமல் நடைபாதைகளிலேயே தூங்கி எழுந்து வேலைக்கு சென்று வந்தார்.

இவரது நண்பர் சிவக்குமார். விழுப்புரத்தை சேர்ந்த இவரும் ராபர்ட்டும் ஒன்றாகவே வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். கே.கே.நகர் அண்ணா மெயின்ரோடு கே.வி.சண்முகம் சாலை சந்திப்பில் நடைபாதையில் நேற்று 2 பேரும் தங்கி இருந்தனர்.

அப்போது ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்து வந்தது.

சிவக்குமாரிடம் ராபர்ட் சில நாட்களுக்கு முன்பு 250 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் ராபர்ட் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

பணத்தை திருப்பி கேட்கும்போதெல்லாம் ராபர்ட் அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளார். ரூ.250 கடன் தொகையில் 125 ரூபாயை ராபர்ட் திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணம் ரூ.125 ஐ கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதுதொடர்பாகவே நேற்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சிவகுமாரை ராபர்ட் மீண்டும் அவதூறாக பேசியுள்ளார். தாய்- தந்தையை பற்றியும் ராபர்ட் பேசி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் பீர்பாட்டிலை உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் ஓங்கி குத்தினார்.

இதில் சிவக்குமார் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே ராபர்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் உதவி கமி‌ஷனர் ராதாகிருஷ்ணன், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ராபர்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் எனது தாயை பற்றி தவறாக பேசியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், இதன் காரணமாகவே ராபர்ட்டை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று ராபர்ட்டுடன் சண்டை ஏற்பட்ட பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்ற சிவக்குமார் மீண்டும் திரும்பி வந்து கொலையை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ராபர்ட் கடந்த 18 ஆண்டுகளாக சென்னையில் வேலை செய்து வந்துள்ளார். அருப்புக்கோட்டையில் உள்ள அவரது குடும்பத்தினர் யார் என்பதை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News