திண்டிவனத்தில் மூதாட்டிக்கு 3 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊழியர்கள்
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அப்போது திண்டிவனத்தை அடுத்த விட்டலாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 48). விவசாயி. அவரது தாய் கண்ணம்மா (70) என்பவருடன் அங்கு வந்தார். பின்னர் அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் தனது தாய் கண்ணம்மாவுக்கு விட்டலாபுரத்தில் நடந்த சிறப்பு முகாமின்போது 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலையில் ஏதும் பாதிப்பு ஏற்படுமா? என சிவக்குமார் கேட்டார்.
அப்போது முகாமை ஆய்வு செய்யவந்த கலெக்டர் மோகனிடம் சிவக்குமார் கூறியதாவது:-
என்னுடைய தாயார் கண்ணம்மாவுக்கு ஏற்கனவே 2 முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று காலை நான் எனது விவசாய நிலத்துக்கு சென்றிருந்தேன். எனது தாயாருக்கு சற்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. எனது தாயார் பொது இலவச மருத்துவமுகாம் என நினைத்து விட்டலாபுரத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் எனது தாயாரிடம் எந்த விபரத்தையும் கேட்காமல் அவருக்கு 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இது குறித்து ஊசிபோட்டவர்களிடம் சென்று நான் கேட்டபோது திண்டிவனத்துக்கு சென்று டாக்டரிடம் கேட்கும்படி கூறினர். அதனால் நான் இங்கு வந்தேன் என்று கூறினார்.
அதற்கு கலெக்டர் மோகன் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் புதிதாக 27,254 பேருக்கு கொரோனா தொற்று