உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு நடத்த திட்டம்
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்த உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர்:
உணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டல்கள், பள்ளி, கல்லூரி கேன்டீன்கள், சாலையோர உணவுக்கடைகள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்து ‘லைசென்ஸ்’ பெற வேண்டும்.
இதன் வாயிலாக நுகர்வோருக்கு பாதுகாப்பான, சுகாதாரமான உணவு, குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. அவ்வகையில் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., முத்திரை பெறுவதும் அவசியமாகும்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் பி.ஐ.எஸ்., முத்திரை பெறாத போலியான குடிநீர் பாட்டில்கள், அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பாக்கெட் குடிநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ், பழச்சாறு விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்த உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது:
முறையான அனுமதி பெறாமல் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குவதாக அவ்வப்போது புகார் எழுகிறது. பி.ஐ.எஸ்., அனுமதி இல்லாமல் பாக்கெட், பாட்டில் குடிநீர் ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது.
பி.ஐ.எஸ்., அனுமதி பெற காலதாமதம், ஏராளமான நடைமுறை சிக்கல் இருப்பதால் சில நிறுவனங்கள் மூலிகை குடிநீர், ‘பிளேவர்டு டிரிங்கிங் வாட்டர்’ என குடிநீர் விற்பனை செய்கின்றனர். ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.