செய்திகள்
காபி, டீ விற்பனை

கோவையில் மேலும் ஒரு சிறை பஜார் திறப்பு - குறைந்த விலைக்கு டீ, காபி விற்பனை

Published On 2019-10-09 09:42 GMT   |   Update On 2019-10-09 09:42 GMT
கோவையில் சிறை பஜாரில் டீ, காபி மற்றும் போண்டா, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள், பேக்கரி பொருட்கள் சிறைத்துறை நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை:

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள், குண்டர் தடுப்பு பிரிவு கைதிகள் என 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு டீ, காபி தின்பண்ட வகைகள், பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இங்கு பணி அமர்த்தப்படுகின்றனர். இந்த சிறிய பஜாருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மத்திய சிறைக்கு நஞ்சப்பா ரோட்டில் மற்றும் தேசிய பூங்கா அருகே எல்.இ.டி. காலனி ஆகிய இரு இடங்களில் நுழைவாயில்கள் உள்ளன.

இதில் தேசிய பூங்கா அருகே உள்ள நுழைவாயில் தான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. மத்திய சிறைக்கு வரும் போலீசார், கைதிகளை காண வரும் உறவினர்கள் இந்த நுழைவு வாயில் வழியாகத்தான் வந்து செல்கின்றனர்.

தினசரி 500-க்கும் மேற்பட்டோர் இந்த வழியாக வந்து செல்கின்றனர். இதன் அருகே 2-வது சிறிய பஜார் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறை பஜாரை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் திறந்து வைத்தார். இந்த சிறிய பஜார் 2 சென்ட் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு டீ, காபி மற்றும் போண்டா, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள், பேக்கரி பொருட்கள் சிறைத்துறை நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 3 தண்டனை கைதிகள் இங்கு பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வாரத்தில் 5 நாட்கள் இந்த சிறை பஜார் திறந்து இருக்கும்.

Tags:    

Similar News