செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

Published On 2021-06-06 15:07 GMT   |   Update On 2021-06-06 15:07 GMT
ராமநாதபுரம், கடலாடியில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
சாயல்குடி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் சட்டம் கொண்டுவரப்பட்ட ஜூன் 5-ந் தேதி நாடு முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் வேளாண் சட்ட மசோதாக்களை தீவைத்து எரித்தனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மயில்வாகனன், தாலுகா தலைவர் செந்தில், தாலுகா செயலாளர் ராசு, துணை செயலாளர் மகாலிங்கம் உள்பட நூற்றுக்கணக்கானோர் தங்களின் வீடுகளின் முன்பு மேற்கண்ட வேளாண் மசோதாக்களை திரும்ப பெற கோரி கோஷமிட்டு மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாவை தீவைத்து எரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஏராளமானோர் அவரவரவர் வீடுகளின் முன்பு கலந்து கொண்டனர்.

மேலும் கடலாடியில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. கடலாடியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தபால் நிலையம் முன்பு நடைபெற்ற சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் மயில்வாகனன், கருணாநிதி ஆகியோர் தலைமை வகித்தனர். கடலாடி தாலுகா செயலாளர் நவநீதகிருஷ்ணன், உள்ளாட்சி ஊழியர் சங்க தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைதொடர்ந்து மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி கடலாடி தபால் நிலையம் முன்பு சட்ட நகல் எரித்து மற்றும் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். விவசாய சங்க நிர்வாகி அந்தோணி நன்றி கூறினார்.
Tags:    

Similar News