இந்தியா
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்

2000 ரூபாய் கள்ள நோட்டு கும்பல் சிக்கியது: ரூ.7 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

Published On 2022-01-26 16:24 GMT   |   Update On 2022-01-26 16:24 GMT
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப், 7 செல்போன்கள், ரூ.28170 ரொக்கப்பணம் (உண்மையான பணம்), ஆதார், பான் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பை:

மும்பையில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனைகளில் 2000 ரூபாய் கள்ளநோட்டு கும்பல் சிக்கியது. தகிசார் செக்போஸ்ட்டில் நேற்று மாலை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ஒரு காரில் பண்டல் பண்டலாக 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் கொண்ட பண்டல்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அந்தேரி புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 3 பேர்  சிக்கினர். அவர்களிடம் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லேப்டாப், 7 செல்போன்கள், ரூ.28170 ரொக்கப்பணம் (உண்மையான பணம்), ஆதார், பான் கார்டுகள், டிரைவிங் லைசென்ஸ்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 31ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News