செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றப்பின்னணி உள்ள 71 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றப்பின்னணி உள்ள 71 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் குற்றச் செயல்களை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே சில குற்றச் செயல்கள் நடைபெற்றன. இந்த நிலையில் அவரது உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் ரவுடிகளை கைது செய்யும் பணி நடந்தது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி மேற்பார்வையில் அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட குற்றப்பின்னணி உள்ள 71 பேரை நேற்று முன்தினம் இரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் அவ்வப்போது ஈடுபட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.