செய்திகள்
வினிஷ்வினோத் - திருஸ்யா

திருமணத்துக்கு மறுத்த சட்ட கல்லூரி மாணவியை குத்தி கொன்ற காதலன்

Published On 2021-06-18 10:49 GMT   |   Update On 2021-06-18 10:49 GMT
திருவனந்தபுரம் அருகே திருமணத்துக்கு மறுத்த சட்ட கல்லூரி மாணவியை கொலை செய்த காதலன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பெருந்தலமன்னா பகுதியைச் சேர்ந்தவர் பால சந்திரன். இவர் விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருஸ்யா (வயது21), தேவஸ்ரி (13) என 2 மகள் உள்ளனர். திருஸ்யா அப்பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ஆம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வந்தார்.

பெருந்தலமன்னா அருகே முட்டிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வினிஷ்வினோத்(21) இவர் திருஸ்யாவுடன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 வில் ஒன்றாக படித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. திருஸ்யா, கல்லூரி சென்ற பின்பு வினிஷ்வினோத்துடனான பழக்கத்தை கைவிட்டார்.

ஆனால் வினிஷ்வினோத், திருஸ்யாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதை திருஸ்யா ஏற்கவில்லை. மேலும் வினிஷ்வினோத்தை திருமணம் செய்யவும் மறுத்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திருஸ்யாவின் தந்தை பாலச்சந்திரன் கடைக்கு தீ வைக்கப்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து புகார் அளிக்க திருஸ்யாவின் தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றார். வீட்டில் திருஸ்யாவும், அவரது தங்கையும் மட்டுமே இருந்தனர்.

அப்போது திடீரென வினிஷ்வினோத், திருஸ்யா வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்த திருஸ்யாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி தகராறு செய்தார். இதில் திருஸ்யாவுக்கும், வினிஷ் வினோத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வினிஷ்வினோத் கத்தியால் திருஸ்யாவை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டுபட்டது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். இந்த தகராறில் திருஸ்யாவின் தங்கை தேவஸ்ரியும் படுகாயம் அடைந்தார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதனால் பயந்து போன வினிஷ்வினோத் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி செல்ல முயன்றார். சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் அவரை பிடித்து பெருந்தலமன்னா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீஸ் விசாரணையில், திருஸ்யாவும், தானும் காதலித்ததாவும் ஆனால் அவரது குடும்பத்தினர் பேச்சை கேட்டு தன்னை திருமணம் செய்ய திருஸ்யா மறுப்பு தெரிவித்ததாகவும் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெருந்தல மன்னா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்தி குத்தில் படுகாயம் அடைந்த திருஸ்யாவின் தங்கை தேவஸ்ரி அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

Tags:    

Similar News