செய்திகள்
மாலி: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலி
மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
பமாகோ:
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பல ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் குழுவினரும், பயங்கரவாத அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில், மாலியில் கடந்த மாதம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ராணுவ கிளர்ச்சியாளர்கள் நாட்டின் அதிபர் இப்ராஹிம் புவுபக்கர், பிரதமர் பவ் சிஸ்சே போன்றவர்களை கைது செய்தனர்.
தற்போது அந்நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தொடர்ந்து ரோந்து உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் கொவ்லிஹுரோ மாகாணம் ஹுய்ரி என்ற நகரில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் சென்ற வாகனங்களை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றதால் அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.