செய்திகள்
இந்திராணி

சிறையில் சீருடை அணிவதை எதிர்த்த இந்திராணி மனு தள்ளுபடி

Published On 2021-01-20 03:08 GMT   |   Update On 2021-01-20 03:08 GMT
மகள் கொலை வழக்கில் கைதான இந்திராணி சிறையில் சீருடை அணிவதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
மும்பை :

மும்பையில் பிரபல தனியார் டி.வி. சேனல் நிர்வாகியான பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இருவரும் மறுமணம் செய்தவர்கள். இந்திராணிக்கு முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போரா (வயது 24), பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகனுடன் காதல் கொண்டார்.

இந்த முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்ற மகளையே இந்திராணி முகர்ஜி கொலை செய்து, உடலை ராய்காட் காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். 2012-ம் ஆண்டு நடந்த இந்த கொலை 2015-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, இந்திராணியை சி.பி.ஐ. கைது செய்தது. பின்னர் அவர் மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் இந்திராணி முகர்ஜிக்கு சிறையில் குற்றவாளிகள் அணியும் பச்சை நிற சீருடையை அணிய வேண்டும் என்று சிறை நிர்வாகம் கூறியது. இதை எதிர்த்து அவர் தனது வக்கீல் மூலம் மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் அணியும் சீருடையை, விசாரணை கைதியான தன்னை அணிய சிறை நிர்வாகம் வற்புறுத்துவதாக கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜக்தாலே, சிறைக்கைதி இந்திராணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News