செய்திகள்
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த தடுப்பூசி கேம் சேஞ்சராக இருக்கும் -மருத்துவ நிபுணர்
ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியானது, முதல் கட்டம் மற்றும் 2வது கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியது. தற்போது 3 வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.
இதுபற்றி தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா கூறுகையில், ‘பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியானது, நோவாவாக்ஸ் தடுப்பூசியைப் போன்றது. கொரோனாவுக்கு எதிராக 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும். கேம் சேஞ்சராகவும் இருக்கலாம். தற்போது இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது. அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும்’ என்றார்.
பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசியானது, மிகவும் மலிவான விலையில், 2 டோஸ்கள் 250 ரூபாய்க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.