செய்திகள்
அவினாசி உயிர் உர உற்பத்தி மையத்தில் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதனை ஒரு வருடம் இருப்பு வைத்து பயன்படுத்த முடியும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவிநாசி:
வேளாண்மை துறை சார்பில் அவிநாசி சீனிவாசபுரத்தில் உயிர் உர உற்பத்தி மையம் செயல்படுகிறது. இங்கு திரவ வடிவிலான உயிர் உரம் தயாரிக்கும் கட்டமைப்பு ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டு ரூ. 1.27 கோடி ஒதுக்கப்பட்டது.
தேவையான உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு உற்பத்தி துவங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் மனோகரன் கூறியதாவது:-
எந்திர உதவியுடன் தானியங்கி முறையில் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்படும். அதன் தரம் 100 சதவீதம் உறுதி செய்யப்படும். சொட்டு நீர் பாசனத்தில் இந்த உரத்தை சேர்த்து செலுத்த முடியும் என்பதால் மருந்து வீணாகாது. பயிர் வளர்ச்சி, நோய் எதிர்ப்புத்திறனை அதிகப்படுத்தி வேரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதால் மகசூல் அதிகரிக்கும். மண்வளம் பாதுகாக்கப்படும்.
இந்த உரத்தை ஓராண்டு காலம் வரை இருப்பு வைத்து பயன்படுத்த முடியும். 500 மி.லி.,க்கு, 150 ரூபாய் என அரசின் சார்பில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் திரவ உயிர் உற்பத்தி துவங்கும். திரவ உயிர் உரத்தை ஓராண்டு காலம் வரை இருப்பு வைத்து பயன்படுத்த முடியும் என்றார்.