உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திண்டிவனம் அருகே காவலாளி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை

Published On 2022-05-07 10:04 GMT   |   Update On 2022-05-07 10:04 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காவலாளி வீட்டில் இருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பிரம்மதேசம் போலீஸ் சரகம் பழமுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். (வயது 52). அந்த பகுதியில் உள்ள குவாரியில் காவலாளியாக உள்ளார். அவரது மனைவி ராணி.

நேற்று வழக்கம் போல் ராஜ் வேலைக்கு சென்றார். வீட்டில் ராணி தனது குழந்தைகளுடன் இருந்தார்.

நேற்று இரவு திடீர் என மழை பெய்தது. இதனால் மின்சாரம் தடைபட்டது. எனவே ராணி தனது குழந்தைகளுடன் வீட்டின் முற்றத்தில் தூங்கினார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் ராஜ் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் அங்கு பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் தொங்கிய பீரோ சாவியை எடுத்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை எழுந்து பார்த்த ராணி தனது வீட்டில் பீரோவில் இருந்து 30 பவுன், ரூ. 3 லட்சம் கொள்ளை போனது கண்டு கதறிதுடித்தார். சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டனர். அப்போது ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் நகை பெட்டி கிடந்தது. ஆனால் அதில் நகை இல்லை.

இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா நேரடியாக விசாரணை நடத்தினார்.
Tags:    

Similar News