ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை திடீர் உயர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி அறிவித்தன.
இந்த விலை உயர்வு காரணமாக டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்தது. ஆவின் தயாரிப்பு நெய், பால்கோவா போன்றவை வருகிற 18-ந்தேதி முதல் விலை உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலையும் உயர்ந்துள்ளது.
சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது. இந்த பால்கோவா கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.260 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து பால்கோவா தயாரிப்பாளர்கள் கூறுகையில், கூட்டுறவு சொசைட்டி பால் மூலம் பால்கோவா தயாரித்து வருகிறோம். தற்போது இந்த பாலின் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வேறு வழியின்றி பால்கோவா விலையை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து தரம் மாறாமல் மக்களுக்கு வழங்கி வருகிறோம் என்றனர்.