செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்த வியாபாரி

கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

Published On 2021-01-12 13:18 GMT   |   Update On 2021-01-12 13:18 GMT
விருதுநகர் அருகே கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:

சிவகாசி ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). சிவகாசியில் தனது குடும்பத்தாருடன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இவர் பின்பு தனக்கு தெரிந்த சிவகாசி, தளவாய்புரம், அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நபர்களிடம் கடன் பெற்று தனியாக வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் வியாபாரி கணேசன் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரால் கடனுக்கு வட்டியும், அசலும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடன் கொடுத்த சிலர் கூடிப்பேசி கணேசனின் குடும்பத்தாரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி கணேசனின் மனைவி உரிய நடவடிக்கை எடுக்க கோரி போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கணேசன் இதுகுறித்து மனு கொடுக்க தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். இவரது மனைவி மனு கொடுக்க உள்ளே சென்றபோது இவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் கணேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News