லைஃப்ஸ்டைல்
வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லதா? சமைத்து சாப்பிடுவது நல்லதா?

Published On 2020-06-26 09:54 GMT   |   Update On 2020-06-26 09:54 GMT
வெள்ளரிக்காயில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் சத்து நிறைந்த வெள்ளிக்காயை பச்சையாக சாப்பிடுவது நல்லதா? அல்லது சமைத்து சாப்பிடுவது நல்லதா? என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் தொட்டுக்கொள்ளும் பதார்த்தமாக காய்கறிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து, பக்குவம் செய்து சாப்பிட வகையைச் சார்ந்ததாக இருக்கின்றன.  ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கின்றன. அப்படியான ஒரு காய் தான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

.காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய் தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18தான். விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக் காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்குத் தனிச் சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக் கூடியது. இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறு களையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது. வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணம் தெரியும். காலரா நோயாளிகள் வெள்ளரிக் கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும்.

வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம். தினமும் மிகச்சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த்துண்டுகளை நறுக்கிப் போடவும்.  அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும் போட்டு வைத்து வெஜிடபிள் சாலட் போல் பரிமாற வேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச் செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ச்செய்யும்.

வெள்ளிக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது. மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

முடிவளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.  இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு, இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு, பச்சடிக் கீரைச் சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்று விடும்.

வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில் தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள். 
Tags:    

Similar News