செய்திகள்
வரும் ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் வறுமை முற்றிலும் ஒழியும் -நாராயணமூர்த்தி
இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்றவற்றில் முன்னோடியாக திகழவேண்டியது முக்கியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
கவுகாத்தி:
கவுகாத்தி ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசும்போது, இந்தியாவில் வரும் ஐம்பது ஆண்டுகளில் வறுமை, ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்றவை முற்றிலுமாக ஒழியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல சவால்களுக்கு மத்தியில் பொறுப்புடன் இந்த இலக்கை அடைய முயன்றால் வெற்றி பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
‘வரும் 50 ஆண்டுகளில் நிச்சயம் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என நம்புகிறேன். அப்போது இந்தியாவில் நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் வறுமை மாதிரியானவை அறவே இருக்காது. இதற்கு அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்றவற்றில் முன்னோடியாக திகழவேண்டியது முக்கியம். மேலும் இதற்கு திறமையான நிர்வாக ஆளுமைப் பண்பு கொண்டவர்களும் அவசியம்’ என அவர் விளக்கினார்.