செய்திகள்
நீர்மட்டம் குறைந்ததால் அமராவதி அணையில் மீன்பிடிக்கும் பணிகள் தீவிரம்
அமராவதி அணையில், சராசரியாக 350 முதல் 600 கிலோ மீன்கள் வரை பிடிபடுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையில் மீன் வளர்ச்சி கழகத்தால் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது.
அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்து, ஆண்டில் இரு சீசன்களில் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்படுகின்றன.
குறிப்பாக, கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா ரக மீன்களே அணைகளில் வளர்ப்புக்கு தேர்வு செய்யப்படுகின்றன.
அணைகளின் நீர்மட்டம், குறையும் போது மீன்கள் பிடிக்கப்படுவது வழக்கம். தற்போது அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக நீர் மட்டம் குறைந்து வருகிறது.
இதையடுத்து பரிசல் வாயிலாக, மீனவர்கள் மீன்பிடித்தலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அமராவதி அணையில், சராசரியாக 350 முதல் 600 கிலோ மீன்கள் வரை பிடிபடுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத நிலையில், காற்றின் வேகமும் குறைந்துள்ளது. இதனால், அணையில் பரிசல் மீன்பிடி தொழில் சுறுசுறுப்படைந்துள்ளது.