செய்திகள்
டெங்கு காய்ச்சல்

ஜிகா, டெங்கு பரவல் எதிரொலி- கோவையில் இருந்து கேரளா செல்லும் பஸ்களில் தீவிர கண்காணிப்பு

Published On 2021-11-20 07:27 GMT   |   Update On 2021-11-20 07:27 GMT
உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் நேற்று சற்று உயர தொடங்கியுள்ளது. 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோரின் உத்தரவின்பேரில், மாநகரப் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்களும், புறநகர் பகுதிகளில் சுகாதாரத் துறை ஊழியர்களும் நோய்த் தொற்று தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. கேரளாவுக்கு புறப்படும் பஸ்களில் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

மேலும் பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்கின்றனரா என்பதையும் கண்காணிக்கின்றனர். முக கவசம் அணியாதவர்களை முக கவசம் அணிந்து பயணிக்க அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் கேரளா செல்லும் பஸ்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கேரளத்துக்கு தினமும் 25-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பஸ்கள் மூலமாக நோய்த் தொற்று பரவமால் தடுக்கும் விதமாக, பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று தாக்கம் இல்லை என்கிற நிலை வரும் வரை இப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றனர்.

Tags:    

Similar News