தமிழ்நாடு
கைதான கல்யாண மன்னன் வின்சென்ட் பாஸ்கர், மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண்கள்

கல்யாண மன்னன் வலையில் வீழ்ந்த வசதியான பெண்கள்

Published On 2021-12-01 09:24 GMT   |   Update On 2021-12-01 09:24 GMT
கல்யாண மன்னன் வின்சென்ட் ராஜ், இதுவரை திருமணம் முடித்த பெண்கள் அனைவருமே வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். திருமண புரோக்கர்களை பணம் தருவதாக ஆசை காட்டி இதுவரை கைவரிசை காட்டி வந்துள்ளார்.
நெல்லை:

கொரோனா கால கட்டத்தை பயன்படுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் நகை-பணம் மோசடி செய்த கல்யாண மன்னனை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர் கடந்த 2 ஆண்டுகளில் 6 பெண்களிடம் சுமார் 150 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாயை வரதட்சணையாக பெற்று அதனை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகி உள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-

பாளை என்.ஜி.ஓ. பி காலனி உதயா நகரை சேர்ந்தவர் கணேசன் என்ற ஜோசப்ராஜ். இவர் பாளை டக்கரம்மாள்புரம் ஐ.ஆர்.டி. பாலிடெக்னிக்கில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் விஜிலா ராணி(வயது 33). இவர் பி.எட். முடித்துவிட்டு வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகன் வின்சென்ட் ராஜன் என்பவருக்கும் பெருமாள் புரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் நடந்துள்ளது. அப்போது அவருக்கு வரதட்சணையாக 40 பவுன் தங்கநகை, ரூ.3 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாயர்புரத்தில் சில நாட்களே குடும்பம் நடத்திய நிலையில், தொழில் தொடங்க போவதாக கூறி விஜிலாராணியிடம் நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு சென்ற வின்சென்ட் ராஜன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.

அதிர்ச்சி அடைந்த விஜிலா ராணி தனது தந்தையுடன் சேர்ந்து நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்துள்ளனர். கமி‌ஷனர் செந்தாமரைகண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சாமி தலைமையிலான போலீசார் வின்சென்ட் ராஜை தேடி கண்டுபிடித்து பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரித்தபோது தான் வின்சென்ட் ராஜின் உண்மையான பெயர் வின்சென்ட் பாஸ்கர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் வெவ்வேறு பெயர்களை கூறி இதுவரை 6 பெண்களை திருமணம் செய்ததும், அதன்மூலம் கிடைத்த வரதட்சணையை வைத்து கொண்டு சொகுசாக வாழ்ந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் திசையன் விளையை சேர்ந்த ஒரு புரோக்கர் மூலமாக விஜிலாராணியை 6-வதாக திருமணம் செய்ததும், இதற்காக சித்தியாகவும், தாயாகவும் 2 பெண்களை நடிக்க வைத்ததும் தெரிய வந்தது.

விஜிலாராணியின் தந்தை கணேசன், தனது மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற ஆசையில் பாளையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த வின்சென்ட், திசையன்விளை சுவிஷேச புரம் வடக்கு தெருவை சேர்ந்த இன்பராஜ் என்ற திருமண புரோக்கரிடம் பேசி உள்ளார். அப்போது, விஜிலா ராணியை தனக்கு திருமணம் செய்து வைத்தால், அதில் கிடைக்கும் வரதட்சணை தொகையை 2 பேரும் சமமாக பங்கிட்டு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அவரும் பணத்திற்கு ஆசைப்பட்டு கணேசனை தொடர்பு கொண்டு இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

இந்த திருமணத்திற்காக சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரை சேர்ந்த பிளாரன்ஸ் (58) என்ற பெண்ணை தனக்கு தாயாகவும், திசையன்விளை ஜேம்ஸ் தெற்கு தெருவை சேர்ந்த தாமரை செல்வி(56) என்ற பெண்ணை தனக்கு சித்தியாகவும் நடிக்க வைத்துள்ளார்.

வின்சென்ட் பாஸ்கர் சாயர்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை முதலாவதாக திருமணம் செய்துள்ளார். பின்னர் பணகுடி அருகே உள்ள பாம்பன்குளத்தை சேர்ந்த பெண்ணை 2-வதாகவும், களக்காடு டோனாவூரில் 3-வது திருமணமும் செய்துள்ளார்.

களக்காடு கீழகாடு வெட்டியை சேர்ந்த பெண்ணை 4-வதாகவும், தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணை 5-வது திருமணம் செய்த வின்சென்ட் ராஜ், கடைசியாக பாளையை சேர்ந்த விஜிலா ராணியை திருமணம் முடித்துள்ளார். 7-வதாக ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வின்சென்ட் ராஜ், இதுவரை திருமணம் முடித்த பெண்கள் அனைவருமே வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அந்தந்த பகுதியில் உள்ள திருமண புரோக்கர்களை பணம் தருவதாக ஆசை காட்டி இதுவரை கைவரிசை காட்டி வந்துள்ளார்.

ஒவ்வொரு பெண்களுடனும் சுமார் 3 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தும் வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்ந்துள்ளார். இதனால் அவரை நம்பிய பெண்களிடம் தனக்கு வியாபாரம் செய்வதற்கு பணம் வேண்டும் என்று கூறி நகை-பணத்தை அபகரித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்ட மற்ற பெண்களிடம் இருந்து எந்த புகார்களும் வரவில்லை என்றாலும், அவர்களிடம் இருந்தும் இதுவரை சுமார் 150 பவுன் தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாயை வின்சென்ட் ராஜ் அபகரித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே விஜிலா ராணியை திருமணம் செய்ய உதவி செய்த புரோக்கர் இன்பராஜ், தலைமறைவாகிவிட்டார். அவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். வின்சென்ட் பாஸ்கர் மேலும் பல பெண்களையும் தனது வலையில் வீழ்த்தி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உரிய முறையில் அனுமதி பெற்று அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News