செய்திகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர வற்புறுத்த வேண்டாம்: அமைச்சர் உத்தரவு

Published On 2021-09-17 02:04 GMT   |   Update On 2021-09-17 02:04 GMT
மாநிலத்தில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் உடல்நலத்தை காக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும், முதல்-அமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் இருக்கிறது.
சென்னை :

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 28 அறிவிப்புகளை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி அதிகாரிகள் மிக வேகமாக செயலாற்றி வருகிறார்கள். இது பெருமையான விஷயம். மானியக் கோரிக்கை அறிவிப்பில் எதற்கெல்லாம் பாராட்டு பெற்றோமோ?, அந்த அறிவிப்பில் எதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை மையப்படுத்தி தான் எதிர்கட்சிகளின் கேள்விகள் இருக்கும்.

ஆக அந்த வகையில் அதிகாரிகளின் செயல்பாடு, அவர்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும் என்ற வகையில் ஓடிக்கொண்டு இருக்கிறோம். முதல்-அமைச்சரை சந்தித்து, பள்ளிகள் திறப்பு குறித்து அறிக்கை கொடுத்திருக்கிறோம். அப்போது முதல்-அமைச்சரிடம் நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ? அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறோம். முதல்-அமைச்சர் பொது சுகாதாரத்துறை ஆலோசனையை கேட்டு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார்.

ஐகோர்ட்டு மதுரை கிளை, தனியார் பள்ளிகள் மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்லக்கூடாது என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதுதொடர்பாக சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி ஆணையர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரை உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப சொல்லி இருக்கிறோம்.



குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று சொல்லக்கூடிய காலம் தற்போது அல்ல. நம்முடைய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூட, நாம் மாணவர்கள் யாரையும் கட்டாயமாக பள்ளிக்கு வரச்சொல்லவில்லை. மாநிலத்தில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் உடல்நலத்தை காக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கும், முதல்-அமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் இருக்கிறது.

குழந்தைகளை பள்ளிக்கு வர யாரும் வற்புறுத்த வேண்டாம். முதல்-அமைச்சர் ஊரடங்கு தளர்வு பற்றி முடிவெடுக்கும்போது வல்லுனர் குழுவோடு ஆலோசித்து எப்படி முடிவு எடுப்பாரோ? அதுபோன்ற முடிவை எப்போது எடுத்து முதல்-அமைச்சர் எங்களுக்கு அறிவிக்கிறாரோ? அதன் அடிப்படையில்தான் பள்ளிக்கல்வித்துறையின் முடிவும் இருக்கும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் அல்லது 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் பரிந்துரைத்து இருக்கிறோம். இடைநிற்றல் மாணவர்களின் விவரங்களை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அறிவுறுத்தி உள்ளோம்.

பணம் கட்டி படிப்புகளை பெறும் மாணவர்கள் மத்தியில், அரசு பள்ளி மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பை வழங்குவதற்கு அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 148 மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News