ஆன்மிகம்
அலங்காநல்லூரில் குதிரை வாகனத்தில் முனியாண்டிசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அலங்காநல்லூரில் முனியாண்டி கோவில் திருவிழா

Published On 2021-04-02 07:37 GMT   |   Update On 2021-04-02 07:37 GMT
அலங்காநல்லூரில் முனியாண்டி சுவாமி கோவில் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
அலங்காநல்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாலம்மன், முனியாண்டி சுவாமி, அய்யனார், கருப்புசாமி கோவில் பங்குனி மாத உற்சவ விழா நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் கடந்த 30-ந் தேதி இரவு முத்தாலம்மன், முளைப்பாரியுடன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்ந்து 2-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காவல் தெய்வமான முனியாண்டி சுவாமி குதிரை வாகனத்தில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பவனி வந்தார். இதனைத் தொடர்ந்து 3-ம் நாள் திருவிழாவான நேற்று முனியாண்டி சுவாமிக்கு பக்தர்கள் கிடாய் வெட்டி நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் அய்யனார், கருப்புசாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று 4-ம் நாள் திருவிழாவில் சுவாமிகள் எழுந்தருளி சென்றுஇருப்பிடம் சேருகிறது. 5-ம் நாள் திருவிழாவாக நாளை 3-ந் தேதி மதியம் 2 மணிக்கு எருதுகட்டு விழா நடைபெறுகிறது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் அலங்காநல்லூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News