மதுரை அருகே விபத்து: கணவன்-மனைவி பலி
திருப்பரங்குன்றம்:
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி வசந்தி (50).
இவர்கள் இருவரும் இன்று காலை, மதுரை அருகே தனக்கன்குளம் சீனிவாசா காலனியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
தனக்கன்குளத்தை அடுத்த 4 வழிச்சாலையை அவர்கள் கடக்க முயன்ற போது சமயநல்லூரில் இருந்து விருதுநகர் நோக்கி வேகமாக வந்த கார், இரு சக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கணவனும், மனைவியும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டி.எஸ்.பி. அருண் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.