அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி-ஓ.பி.எஸ். மரியாதை
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகிற 17-ந்தேதி 48-வது ஆண்டு தொடங்குகிறது. இதை கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணிக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.; புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம்,
புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறு பான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.
அ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, 17-ந்தேதி ஆங்காங்கே அமைந்திருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கும், அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்து, கழகக் கொடிக் கம்பங்களுக்கு புதுவண்ணம் தீட்டி கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.