செய்திகள்
ஆத்தியா தாக்கரே - சோனியா காந்தி சந்திப்பு

பதவியேற்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்திக்கு ஆதித்யா தாக்கரே நேரில் அழைப்பு

Published On 2019-11-27 17:16 GMT   |   Update On 2019-11-27 17:16 GMT
மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் மற்றும் மகா விகாஸ் அகாடி தலைவரான உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவை சகாக்களுடன் நாளை பதவியேற்கிறார். 

இதற்கான நிகழ்ச்சிகள் நாளை மாலை 6.40 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற உள்ளன. இதனையடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா இன்று காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவரான சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது, நாளை மும்பையில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வீட்டிற்கு சென்ற ஆதித்யா தாக்கரே பதவி ஏற்பு விழாவில் விருந்தினராக பங்கேற்க வருமாறு அவருக்கும் அழைப்பு விடுத்தார்.
Tags:    

Similar News