செய்திகள்
அம்மா மினி கிளினிக் திறப்பு விழா- அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்பு
சிவகங்கையில் அம்மா மினி கிளினிக்குகளை கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்து பேசினார்.
சிவகங்கை:
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் மற்றும் உருளி ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 36 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட உள்ளது. இந்த அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என 3 பேர் பணிபுரிவார்கள். அவசர சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை என அனைத்து வகை சிகிச்சைகளும் பெற்று பயன்பெறும் வகையில் அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், ஊசி மருந்துகள் என போதிய அளவு இருப்புடன் இந்த அம்மா மினி கிளினிக்குகள் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், பொது சுகாதாரத்துறையின் மூலம் 100 கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, உருளி ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.