இந்தியா
பேருந்தை ஓட்டும் பெண் பயணி

டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் 10 கி.மீ. தூரம் பேருந்தை ஓட்டிய பெண்

Published On 2022-01-15 10:40 GMT   |   Update On 2022-01-15 10:40 GMT
நெருக்கடியான நேரத்தில் பதற்றமடையாமல் துணிச்சலாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிய யோகிதாவை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.
புனே:

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்ற பேருந்தின் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதையடுத்து, ஒரு பெண் பயணி சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். ஜனவரி 7ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

புனே அருகே ஷிரூரில் உள்ள வேளாண் சுற்றுலா மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பேருந்தில் சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பினர். அப்போது டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டது. கை கால்கள் இழுத்த நிலையில், அவர் திடீரென சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து நடுங்கி அழத் தொடங்கினர். 

அப்போது அந்த பேருந்தில் பயணம் செய்த யோகிதா சாதவ் என்ற 42 வயது பெண், பேருந்தை தான் ஓட்டுவதாக கூறி அனைவரையும் அமைதிப்படுத்தி உள்ளார். டிரைவரை ஓரமாக அமரவைத்துவிட்டு, பேருந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றுள்ளார். டிரைவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மற்ற பயணிகளை அவர்களின் ஊர்களில் இறக்கி விட்டுள்ளார். 

தனக்கு கார் ஓட்ட தெரிந்ததால், பேருந்தை ஓட்டுவதற்கு முடிவு செய்ததாகவும், டிரைவருக்கு சிகிச்சை அளிப்பதுதான் முதல் முக்கியமான பணி என்பதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டிச் சென்று, அவரை அங்கே சேர்த்ததாகவும் யோகிதா கூறுகிறார்.

நெருக்கடியான நேரத்தில் பதற்றமடையாமல் துணிச்சலாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிய யோகிதாவை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். 
Tags:    

Similar News