செய்திகள்
கோவிலுக்கு சொந்தமான ரூ.20கோடி நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் புன்செய் நிலமாக இருப்பதால் இதுவரை ஆடு, மாடு மேய்ப்பது போன்றவைகளுக்கு நிலத்தை பயன்படுத்தி உள்ளனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா சிவியார் பாளையத்தில் பரமசிவன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாரிகளால் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த கோவிலுக்கு சொந்த மான 72.86 ஏக்கர் புன்செய் நிலம் சென்னிமலை-காங்கயம் ரோட்டில் உள்ளது. இதில் 69.81 ஏக்கரை 20 ஆண்டுகளாக 19 பேர் ஆக்கிரமித்திருந்தனர். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.
இந்தநிலையில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும் 2018 மார்ச் மாதம் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பினார்.அதன்பின்னும், ஆக்கிர மிப்பாளர்கள் நிலத்தை விட்டு வெளியேறவில்லை.
இந்நிலையில் திருப்பூர் மண்டல இணை கமிஷனர் நடராஜன், உதவி கமிஷனர் வெங்கடேஷ் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 69.81 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அறநிலையத் துறை இணை ஆணையர் நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் அனைத்தும் புன்செய் நிலமாக இருப்பதால் இதுவரை ஆடு, மாடு மேய்ப்பது போன்றவைகளுக்கு நிலத்தை பயன்படுத்தி உள்ளனர். இனி இந்த நிலங்கள் அனைத்தும் அறநிலையத்துறை சார்பில் பொது ஏலம் விடப்படும் என்றார்.