தொழில்நுட்பம்
கூகுள் நிறுவனத்திற்கு பிரத்யேக எக்சைனோஸ் சிப் உருவாக்கும் சாம்சங்
சாம்சங் நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்கு வழங்க பிரத்யேகமாக எக்சைனோஸ் பிராசஸரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் சொந்தமாக எக்சைனோஸ் பிராசஸர்களை கடந்த சில ஆண்டுகளாக தனது சாதனங்களில் பயன்படுத்தி வருகிறது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் ஏஎம்டி கிராஃபிக்ஸ் கொண்ட புதிய எக்சைனோஸ் பிராசஸரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது GPU செயல்திறனை வெகுவாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலங்களில் சாம்சங் தவிர மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் எக்சைனோஸ் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்காக புதிய சிப்செட் ஒன்றை பிரத்யேகமாக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
சாம்சங் உருவாக்கும் புதிய எக்சைனோஸ் பிராசஸர் 2X ARM கார்டெக்ஸ் A78 கோர்கள் + 2X ARM கார்டெக்ஸ் A76 கோர்கள் + 4X ARM கார்டெக்ஸ் A55 கோர்கள் அடங்கிய ஆக்டா கோர் சிபியு 5 நானோமீட்டர் எல்பிஇ வழிமுறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மாலி MP20 Borr GPU மற்றும் கூகுள் என்பியு, விஷூவல் கோர் ஐஎஸ்பி பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
பிரத்யேக பிராசஸரை உருவாக்க சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 30 பேர் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த குழு புதிய சிப்செட் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த குழு ஃபேஸ்புக்கின் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி சாதனங்களுக்கான சிப்செட்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குழு எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
சாம்சங் உருவாக்கும் பிரத்யேக சிப்செட் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது எதிர்கால பிக்சல் ஸ்மார்ட்போன்கள், குரோம்புக் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதுபற்றிய விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகலாம்.