செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு - டிரம்ப் அறிவிப்பு

Published On 2019-11-16 18:49 GMT   |   Update On 2019-11-16 18:49 GMT
ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட 2 அமெரிக்க ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
வா‌ஷிங்டன்:

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தொடங்கிய போர் 19-வது ஆண்டாக நீடித்து வருகிறது. அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை விரட்டியடித்து விட்டாலும்கூட, அமெரிக்க படைகள் அங்கிருந்து தலீபான்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு அமெரிக்க படையில் இடம் பெற்று போர் புரிந்து வந்த 2 ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் கிளிண்ட் லாரன்ஸ், மேஜர் ஜெனரல் மேத்யூ கோல்ஸ்டீன் ஆகியோர் மீது விசாரணை நடைபெற்றது.அமெரிக்க படை வீரர்களை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சுட்டுக்கொல்லும்படி சக வீரர்களுக்கு கிளிண்ட் லாரன்ஸ் உத்தரவிட்டதில் 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 6 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

ஆப்கானிஸ்தானில் பிடிபட்டிருந்த ஒரு பயங்கரவாதி வெடிகுண்டு தயாரிப்பதில் வல்லுனராக இருந்து, அமெரிக்க படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்ததாக கூறி மேத்யூ கோல்ஸ்டீன் சுட்டுக்கொன்று விட்டார். அவர் மீது விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு ஜனாதிபதி டிரம்ப் மன்னிப்பு வழங்கி உள்ளார். போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளான கடற்படை அதிகாரி எட்வர்டு கல்லாகர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவருடைய தகுதியை ரத்து செய்ததை திரும்ப வழங்கி ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News