செய்திகள்
கோப்புப்படம்

ஆசிரியை திட்டியதாக கூறி 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-02-22 22:31 GMT   |   Update On 2021-02-22 22:31 GMT
திருப்பூரில் ஆசிரியை தி்ட்டியதாக கூறி, 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து மாணவன் படித்த தனியார் பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் தேவா மணிகண்டன் (வயது 16). அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த வாரம் தேவா மணிகண்டனின் வகுப்பு ஆசிரியை, தேவா மணிகண்டனின் தந்தை குமாரை அழைத்து “ உங்கள் மகன் சரியாக படிக்கவில்லை” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தேவா மணிகண்டன் மனமுடைந்து காணப்பட்டுள்ளான்.

பின்னர் அன்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த மாணவன் படிக்க வேண்டும் என்றும் கூறி விட்டு அறைக்குள் சென்று பூட்டி உள்ளான். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்த போது தேவா மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேவா மணிகண்டனின் தற்கொலை முடிவுக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று கூறி மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்றுகாலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பள்ளியில் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து ஒருவர் கூட மாணவனின் இறப்பு குறித்து விசாரிக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News