செய்திகள்
கோப்புப்படம்

மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்

Published On 2021-05-05 22:47 GMT   |   Update On 2021-05-06 11:13 GMT
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து, கொடூரமாக தாக்கி வருகிறது. நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை:

மளிகை, காய்கறி, டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என்ற அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது.

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து, கொடூரமாக தாக்கி வருகிறது. நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் சனிக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவின் நோய் தாக்கம் குறைந்தபாடில்லை. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தையும் தாண்டி, பதிவாகி வருகிறது. இதேபோல இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுப்பதற்காக அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும்.

* பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்கவேண்டும்.

* வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.



* மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்படும்.

* மீன், இறைச்சி கடைகளில் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கவேண்டும்.

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை

* டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும். உணவகங்கள், டீ கடைகளில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. உணவு விடுதிகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் மெஸ் ஆகிய இடங்களில் இருந்து உணவு பார்சல்களை மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும். அந்த வகையில் அங்கிருந்து காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்களை பெற்றுக்கொள்ளலாம். விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும்.

* உள்அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் செயல்படாது.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.

* ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் (ஸ்பா) இயங்க தடை விதிக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்க்குகள் இயங்கும்



* அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும்.

* தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

கடுமையான நடவடிக்கை

* தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேரப் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* தரவு மையங்களில் (டேட்டா சென்டர்) பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ளலாம்.

* கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News